Monday, March 29, 2010

நாலேகால் டாலர் - அணிந்துரை - ஜெயபாஸ்கரன்

ஆழ்மனதின் அறச்சீற்றம்






கடந்த 2004 ஆம் ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையின் (FETNA) 17ஆம் ஆண்டு தமிழர் திருவிழா மலரைச் சென்னையில் வடிவமைத்துத் தயாரிக்கும் பணியில் அதன் குழுவினரோடு ஈடு[பட்டிருந்தேன். அது ஒரு ஜூன் மாதத்தின் நள்ளிரவு. உலகின் பலநாடுகளிலிருந்தும் அம்மலருக்கும் வந்திருந்த பல்வேறு வகையான படைப்புகளை என் பணியின் நிமித்தம் படிக்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. படித்துப் பிழைதிருத்தம் செய்துகொண்டிருந்தேன்.

அதிகம் பேசாதவரும் ஆழ்ந்த இலக்கிய இரசனையாளருமான மலர் வடிவமைப்பாளர் தமிழேந்தி என்கிற இராசேந்திரனும், "சார், இந்த மலருக்கு 'ஈரம்'னு ஒரு கதை வந்திருக்கு சிங்கப்பூர்ல இருந்து. ஜெயந்தி சங்கர்னு ஒருத்தர் எழுதியிருக்காக. ரொம்ப நல்லா இருக்கு சார்", என்று கணிப்பொறிவேலை செய்துகொண்டே என் காதுகளுக்குத் தகவல் சொன்னார். பாறையே வெடித்து வாய்பிளக்கிறதே என்று வியந்து என் கைகளில் இந்த படைப்புகளைத் துழாவி 'ஈரம்' சிறுகதையைத் தேடிப்பிடித்துப் படித்தேன். அதற்குப்பிறகு அன்றைய பணி முடித்து அதிகாலை நான்கு மணிக்கு வழக்கம்போல் பணியிடத்திலேயே படுத்தேன். ஆனால், தூக்கம் வரவில்லை. பிழைப்புக்காக சிங்கப்பூருக்குப் போன தமிழ்நாட்டின் நடுத்தரவயதுப் பெண் ('ஈரம்' கதாநாயகி) என்னை அழ வைத்துக்கொண்டிருந்தாள். பொதுவாகத் திகிலுற்றிருப்பவனை 'பேயறைந்தது' என்பார்கள். அன்று நானும் அப்படித்தான் இருந்தேன். ஒரு சின்ன வித்தியாசம் என்னை ஒரு 'படைப்பு' அறைந்திருந்தது.

மறுநாள் இரவு மலர் தயாரிப்புப் பணிகளின்போது மற்ற படைப்புகளை வடிவமைத்துக் கொண்டே நானும் ராஜேந்திரனும் 'ஈரம்' கதைப் பற்றி நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். வேறு ஏதோவொரு வேலைக்காக அதன் வாரங்கழித்து மலர் அச்சாகி வந்தவுடன் ஒட்டுமொத்த மலரைப் பற்றிப் பேசியவாறு அதன் நிறைகுறைகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன். வேறு ஏதோவொரு வேலைக்காக அங்கே வந்திருந்த யாரோ ஒரு நண்பர், "சாரி, மலர்ல ஈரம்னு ஒரு கதை ரொம்ப நல்லாயிருக்கு சார். ராத்திரி என் வொய்ப்கிட்ட அதைப் பத்திப் பேசிக்கிட்டிருந்தேன்", என்று சொன்னார். ஒரு படைப்பைப் பற்றி இவ்வளவு சிலாகித்தது பொதும் என்று நேற்றைய என் நினைப்பை யாரோ ஒருவர் சம்மட்டியால் அடிப்பதுபோல் அடித்துத் தகர்த்தார். அப்படியெனில் நல்ல படைப்புகள் குறித்து நாம் மௌனமாக இருந்தாலும், 'அதையறிந்தவர்கள்' மௌனமாக இருக்கமாட்டார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நான் உணர்ந்தேன். அப்போதெல்லாம் ஜெயந்தி சங்கர் என்கிறவர் சிங்கப்பூரில் இருந்து எழுதுகிறார் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். வாகனம் சீராக ஓடுகிறது என்பதைச் சொல்வதற்கு 'டிரைவிங்க்' தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லைதானே ! எனவே ஜெயந்தி சங்கருக்கு என்னைத் தெரியாத நிலையிலும் அப்போது அவரது அந்த ஒரு கதையைச் சுமந்து சென்று பலரிடம் இறக்கி வைத்துக் கொண்டிருந்தேன். அவ்வாறான ஒரு வேளையில்தான் சென்னையில் கவிஞர் மதுமிதாவிடம் தான் 'ஈரம்' கதை குறித்துச் சொன்னபோது, "அய்யோ கடவுளே, அவங்கள உங்களுக்குத் தெரியாதா? அவங்க என்னோட தோழிதாங்க!, என்று அநியாயத்துக்கு மென்மையாகவும் நிதானமாகவும் சொன்ன அவர், " ஜெயந்தி எழுதின தையல் கதையை படிச்சீங்களா" என்று கேட்டு, என் ஆர்வத்தை மேலும் தூண்டினார். அடடா அப்படியெனில்...... அவரது மற்ற கதைகளையும் நாம் படித்து விடலாம் என்று அப்போது நான் நினைத்தேன். அதன் தொடர்ச்சியாகவே இப்போது அவரது குறித்து 'என்னை' உங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன்.

இலக்கியத்திற்கு வாழ்க்கைப் பட்டுவிட்ட எவரும் நல்ல இலக்கியங்களைத் தேடிப்பிடித்துப் படித்தேயாக வேண்டும். அதன் விளைவாக நல்ல இலக்கியங்களைப் படைத்தேயாகவேண்டும். இதுதான் இலக்க்கியவியல் விதி. இந்த விதியின்படிதான் இங்கே நல்ல வாசகனுக்கும், நல்ல வாசகனாகவும் இருக்கிற படைப்பாளிக்கும் உண்மையான படைப்பாளிகளும் உண்மைகளைப் படைப்பாவர்களும் மிகவும் எளிதில் தட்டுப்பட்டு வருவார்கள். அப்படித் தான் எனக்கு ஜெயந்தி சங்கர் சட்டெனத் தட்டுப்பட்டார்.

என்னைப் பொறுத்தவரை மிகவும் சுலமானது எது தெரியுமா? ஒரு படைப்பாளியாக வாழ்ந்து நல்ல படைப்புகளைத் தருவதுதான். மிகவும் கடினமானது எது தெரியுமா? படைப்பாளியைப் போன்று நடித்து படைப்புகளைப் போல எழுதுவதுதான். ஜெயந்தி சங்கருக்கு அந்தக் 'கடினம்' நேரவில்லை. படைப்பது என்பது பிரசவவேதனை போன்றது என்றும் படைத்து முற்றுப்புள்ளி வைத்தவுடன்தான் அந்த வேதனையும் வலியும் தீரும் என்றெல்லாம் சொல்கிறார்களே என்று நீங்கள் கேட்கலாம். அது உண்மையில்லை. எழுதத் தெரியாத ஒருவர் எழுதத் தெரியாது இன்னொருவருக்குச் சொன்ன உண்மை என்றே அதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய்
காசுக்கு ரெண்டு விற்கச் சொல்லி
கடுதாசி போட்டானாம் வெள்ளைக்காரன்

என்கிற ஆங்கிலேயரின் நெற்றிப் பொட்டில் அறைந்த இந்த பாடல் வரிகளைப் படைத்த யாரோ ஒரு நாட்டுப்புறத்தான் பிரசவேதனைப் பட்டது போல தெரியவில்லையோ ?

அட அதைக்கூட விடுங்கள்

அவன் போருக்குப் போனான் - நான்
போர்களமானேன் - அவன்
வேல் கொண்டு சென்றான் -நான்
விழிகளை இழந்தேன்


என்கிற இதயம் துளைக்கிற இந்த இலக்கியம் பிரசவவேதனைப் பட்டு எழுதியதுபோலவா தெரிகிறது ?


படைப்பாளி போகிறபோக்கிலே தான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டுப் போய்விடுவான். படைப்பாளி போன்றவன் படைப்பு வரமால் படுத்து உருண்டு
'படைத்ததை' நூலாக்கித் தந்து படிப்பவர்கள் நொந்து நூலாவதற்கும் வழிவகுப்பான். படைப்பு நிமித்தமான பிரசவவேதனை (?)யில் முக்கி முனகிக் கூச்சலிட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கிடையில் சன்னமாக, சங்கீதமாக கம்பீரமாகப் பாடிக் கொண்டிருப்பவர்களை நல்ல வாசகர்களும் நல்ல இலக்கியம் விரும்புவோரும்தான் கண்டுபிடித்துக் காப்பாற்ற வேண்டும். அவ்வாறு பாதுகாத்துப் பாராட்டவேண்டிய படைப்பாளியாகவே நான் ஜெயந்தி சங்கரைப் பார்க்கிறேன்.

நல்ல இலக்கியம் என்பது படைக்கிறவனையும் அதைப் படிக்கிறவனையும் மேம்படுத்தும் என்று ஜெயகாந்தன் ஒருமுறை சொன்னார். இதுதான் உலக அளவிலான உண்மையான இலக்கியக் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டில்தான் ஜெயந்தி தானும் மேம்பட்டு தன் படைப்புளைப் படிக்கிறவர்களையும் மேம்படுத்துகிறார். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளைப் படிக்கிறவர்களால் இவ்வுண்மையை உணர முடியும்.

ஏனெனில் அவருடைய படைப்புகள் நுட்பமானது. ஊன்றிக் கவனித்து உள் நுழைந்து பார்க்கும்போதுதான் அவற்றின் நுட்பம் நமக்கு விளங்கும். போராட்ட வாழ்க்கை, வாழ்க்கைப் பொராட்டம் இவையிரண்டுமே இலக்கியத்திற்கான இரு தண்டவாளங்கள். பெருவாரியான கண்ணதாசனின் படைப்புகள் வாழ்க்கைப் போராட்டத்தைச் சொன்னது. நிகழ்காலத்தில் ஜெயகாந்தன் வாழ்க்கைப் போராட்டத்தை எழுதுகிறார் என்றால் காசி ஆனந்தன் போராட்ட வாழ்க்கையை எழுதிக்கொண்டிருக்கிறார்.

இவ்விரண்டு வகையில் ஜெயந்தியின் படைப்புகள் வாழ்க்கைப் போராட்டைத்தையே மையங்கொண்டு சுழல்கின்றன. சுடர்கின்றன. மனித உளவியலை உளைச்சலை மிகத் திறமையாகப் படம் பிடித்துக்காட்டும் வல்லமை ஜெயந்திக்கு சர்வ சாதாரணமாகக் கைகூடி வருகிறது. இக்கூற்றை நம்புவதற்கு விரும்புகிறவர்கள், இத்தொகுப்பில் உள்ள 'நுடம்' அல்லது 'நாலேகால் டாலர்' அல்லது 'நிஜமற்ற நிழல்' ஆகிய கதைகளில் ஒன்றை அல்லது இத்தொகுப்பில் உள்ள நான் சுட்டிக்காட்டாத ஏதாவதொரு கதையை உடனடியாகப் படித்துவிட்டு அதற்குப்பிறகு என் அணிந்துரைக்கு வரலாம்.

அயல் மண்ணில் வாழப்போனவர்கள் அல்லது பிழைக்கப்போனவர்கள் எத்தகைய அவலங்களுக்கு ஆட்படுகிறார்கள் என்பதை அம்மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிற ஜெயந்தி சொல்லாமல் அல்லது ஜெயந்தி போன்றவர்கள் சொல்லாமல், வேறு யாரால் சொல்லமடியும்? சிங்கப்பூரின் சுகம் பற்றி அவ்வூருக்குச் சுற்றுலா போய் வரும் யாரும் எழுதலாம். அதன்சோகம் பற்றி ஜெயந்தி போன்ற படைப்பாளிகளால் மட்டுமே எழுத முடியும். அங்கெல்லாம் பாராட்டுவதற்கென்று எதுவுமே இல்லையா? என்றும் சிலர் கேட்கக் கூடும். 'புறம்' பாராட்டவும் அல்லது 'புறம்' பேசவும் நாட்டிலே நிறையபேர் இருக்கிறார்கள். அவர்கள் 'ஜாய்•புல் சிங்கப்பூர், கலர்•புல் ' என்று பாடிக்கொண்டிருப்பார்கள். ஆனால், 'அகம்' பார்க்க இங்கே எத்தனைபேர் இருக்கிறார்கள் ? அந்த 'அகம்' பார்க்கிற பணியைத்தான் ஜெயந்தி சங்கர் தன் படைப்புகளின் வாயிலாகச் செய்துகொண்டிருக்கிறார். அழுகிக் கொண்டிருப்பதை அடையாளம் காட்டுவதுதான் ஒரு மருத்துவரின் கடமையே தவிர, நன்றாக இயங்கும் உறுப்புகளைப் பாராட்டிக்கொண்டிருப்பது அவன் வேலையாக இருக்க முடியாது. அப்படி இருக்கவும் கூடாது. ஜெயந்தி சங்கர் ஒரு மருத்துவராகவே தன் கடமையை மிகத் துல்லியமாகச் செய்து வருகிறார்.

விபத்து போல ஒரு நல்ல சிறுகதையை, அல்லது ஓரிரு நல்ல சிறுகதைகளை எழுதிவிட்டு அதன் வாயிலாகக் கிடைக்கும் வரவேற்பில் தொடர்ந்து மோசமான பத்து கதைகளை எழுதித்தள்ளுகிற அல்லது ஒரு கதையில் தான் எடுத்த நற்பெயரைப் பத்து கதைக எழுதிக் கெடுத்துக் கொள்கிற நிலையில் ஜெயந்தி இல்லை. அவர் பத்து சிறுகதை எழுதினார் என்றால், அதில் எட்டு கதைகள் இலக்கிய இதயங்கங்களில் என்றென்றும் உலா வரும் தன்மை பெற்றுத் திகழ்கின்றன. நாகரீகத்தின், செல்வவளத்தின், சட்டத்தின், பாதுகாப்பில் நிகழ்த்தப்படும் மனித நேயமற்ற நுட்பமான வன்முறைக்கு எதிரான அறச்சீற்றமாகவே அவரது படைப்புகள் கருக்கொண்டு உருக்கொள்கின்றன. தமிழ் இலக்கியச் சூழலில் இது மிகவும் அரிதான வரவேற்கத் தகுந்த நிலை.


தமிழின் மிகச்சிறந்த படைப்பாளிகளின் வரிசையில் ஜெயந்தி சங்கர் இடம் பெற்றிருக்கிறார் என்பதை ஒரு வாசகனாக நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். அவ்வாறு சொல்வதில் பெருமிதமடைகிறேன். "எனக்குத் தூக்கம் வரல்லேன்னா புத்தகம் எடுத்துப் படிப்பேன். உடனே தூக்கம் வந்துவிடும்", என்று சில பாவிகள் சொல்லக்கேட்டிருக்கிறேன். "மாபாவி ! ஆகக்கூடி உன்னைத் தூங்க வைக்கிற கருவியா புத்தகம்?", என்றும் அவர்களிடம் கேட்டிருக்கிறேன். படிப்பவனைத் தூங்க வைப்பது அந்நூலைப் படைத்தவனின் குற்றம் என்றுகூட ஒருவன் என் மீது எகிறிப் பாய்ந்தான். எழுத்தின் இலக்கணம் விழிக்க வைப்பதன்றி உறங்க வைப்பதல்ல ! படைத்தவன் உறங்கலாம். அது படைப்பாக இருக்கும்பட்சத்தில் அதைப் படித்தவர்கள் உறங்க மாட்டார்கள்.

"நாலேகால் டாலர்" கதையை எழுதிய இரவில் ஜெயந்தி நன்றாகவே தூங்கியிருக்கக்கூடும். அதைப்படித்த இரவில் என்னால் தூங்க முடியவில்லை.


நல்வாழ்த்துக்களுடன்
ஜெயபாஸ்கரன்
september 2005

நாலேகால் டாலர் - நூல் முன்னுரை- மாலன்

பரிவில் எழுந்த படைப்புக்கள்


எழுத்தாளர்கள், கவிஞர்கள் இவர்களை எல்லாம் படைப்பாளிகள் என்று உலகம் கொண்டாடுவதுண்டு. அவர்களுக்கே கூட அந்தப் பெருமிதம் உண்டு. 'படைப்பதனால் என் பேர் இறைவன்' என்று கண்ணதாசன் பாடினார். ஆனால் என்னைப் பொறுத்தவரை எழுதுகிறவரின் பெருமை அவரது படைப்பாற்றலில் இல்லை. ஒன்றைப் பிறப்பிப்பதில் பெருமை ஏதும் இல்லை. அது ஒரு இயற்கையான, அல்லது லெளகீக அல்லது physical act. ஏதோ ஒன்றாகப் பிறக்கிறோமே, அதுதான் மகிழ்ச்சிக்குரியது. அதுவும் கணந்தோறும் பிறக்க முடிந்தால் நாம்தான் கடவுள். நன்றிந்தக் கணம் நான் புதிதாய்ப் பிறந்தேன், நலிவிலாதோன், நான் கடவுள் என்று மகாகவி (பாரதி) நமக்குத் தெளிவாகச் சொல்லி வைத்திருக்கிறான்.


பறவைகளுக்கு இரண்டு பிறப்பு உண்டு, முட்டையாக பூமியில் விழுவது ஒன்று. முட்டையை மோதி உடைத்துக் கொண்டு குஞ்சாக வெளி வருவது மற்றொன்று என்று சொல்வார்கள். ஆனால் கதாசிரியர்களுக்கு எண்ணற்ற பிறப்புக்கள். ஒவ்வொரு கதையிலும் அவர்கள் தங்கள் பாத்திரங்களாகப் பிறக்கிறார்கள். அந்தப் பாத்திரங்கள் எதிர் கொள்ளும் சூழ்நிலைகள் தங்கள் மனவுலகில் எதிர் கொள்ள வேண்டும், அந்தச் சூழ்நிலைகளில் அவர்கள் எப்படி நடந்து கொள்ளுவார்களோ அதைப் போல தங்கள் மனவுலகில் நடந்து கொள்ள வேண்டும், அவர்களைப் போல சிந்திக்க வேண்டும். ஒரு கதையையும் - ஒரு நல்ல கதையையும், ஒரு நல்ல கதையையும் - ஒரு சிறந்த கதையையும் வேறுபடுத்துவது, இந்தப் 'பிறப்பில்' கதாசிரியர் எந்த அளவிற்குத் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார் என்பதைப் பொறுத்து அமைகிறது. முற்றிலுமாக தனது பாத்திரங்களாக மாறி விடுகிறவர்களது கதைகள் சிறந்த கதைகளாக அமைகின்றன.


இப்படித் தன்னை இழப்பதற்கு, இழந்து வேறு ஒன்றாக ஆவதற்கு ஒரு மனம் வேண்டும். தன்னைத் தாண்டிப் பிறரை நேசிக்கிற மனம். அது நேச்ம் கூட அல்ல. அதற்குப் பெயர் பரிவு. வடமொழியில் தயை என்று ஒரு சொல்கிறார்களே அது.
ஜெயந்தி சங்கருக்கு இப்படி ஒரு தயை ததும்பும் மனம் வாய்த்திருக்கிறது. அதுதான் அவரை எழுதச் செய்கிறது. மிகையாகச் சொல்லவில்லை. அவரது ஈரம் கதையைப் படித்துப் பாருங்கள். அல்லது நுடம் கதையைப் படித்துப் பாருங்கள், அல்லது இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் கை போன போக்கில் சில கதைகளைத் தேர்ந்து படித்துப் பாருங்கள் நான் சொல்வது சரி என்று புரியும்.


சிங்கப்பூரைப் பற்றி எத்தனையோ கவர்ச்சிகரமான சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான தமிழர்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு, அது ஒரு கனவு பூமி. 70களில் வந்த தமிழ்த் திரைப்படங்கள் அதை ஒரு சொர்க்கலோகமாகக் காண்பித்தன. இப்போதும் கூட சில வணிக மேம்பாட்டுக்கான போட்டிகளில் முதல் பரிசு சிங்கப்பூருக்கு ஒரு சுற்றுலாவாக இருக்கும். (இரண்டாம் பரிசு தங்க நாணயம்) சற்று வளப்பமான மேல்தட்டு வட்டாரங்களில், ' என்ன இன்னுமா நீங்கள் சிங்கப்பூர் பார்த்ததில்லை?' எனக் கண்களில் கேள்வி/கேலி மிதக்கும். பல இளைஞர்களுக்கு, குறிப்பாகக் கிராமப்புற இளைஞர்களுக்கு, சிங்கப்பூரில் போய் வேலை செய்து கை நிறைய சம்பாதித்துக் குடுமபத்தை செளகரியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஜீவ லட்சியம்.


அந்த நம்பிக்கையோடு, ஆண்டுதோறும் பலர், இந்தியாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும், பிலிப்பைன்சிலிருந்தும், சிங்கப்பூர் வருகிறார்கள். சுற்றுலாப் பயணிகளைப் பற்றி எழுதுகிற அளவிற்கு தமிழ் ஊடகங்கள் இவர்களைப் பற்றி எழுதுவது இல்லை. அந்த ஊடகங்கள் தீட்டிய சித்திரங்களை மாத்திரமே படித்துவிட்டு சிங்கப்பூர் வருகிறவர்கள், ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை சிராங்கூன் வீதிக்குச் சென்று பார்த்தால் அதிர்ந்து போவார்கள். ஜெயந்தி இந்த மனிதர்களைப் பற்றி எழுதுகிறார். இந்த மனிதர்களாக மாறி எழுதுகிறார்.அவர் அனுப்பிய ஈரம் கதையை திசைகளில் பிரசுரத்திற்கு பரிசீலனை செய்யப் படிக்க முனைந்த போது விக்கித்துப் போனேன். வாழ்விற்கு ப்படி ஒரு முகமிருக்கிறதா? என்ற சிந்தனை நாள் முழுக்க மனதில் ஓரமாக இழையோடிக் கொண்டிருந்தது.


இந்தக் கதையின் சிறப்பு அந்தக் கதையை அவர் குரலை உயர்த்தாமல், சினந்து சீறாம்ல், சாபம் கொடுக்காமல், சலித்துப் புலம்பாமல் சொல்லியிருப்பது. அது கதைக்கு ஒரு கூர்மையைக் கொடுக்கிறது. கதை முடிந்து உங்கள் மனச் செவியில் ஒரு விம்மல் கேட்கும். அதுதான் ஜெயந்தியினுடையது. பிஜித் தோட்டத்துப் பெண்களுக்காக விம்முகிற மகாகவியின் விம்மலைப் போன்ற விம்மல் அது.
நுட்பமாகக் கதை சொல்கிற அவரது ஆற்ற்லை அந்தக் கதையைப் படிப்பதற்கு முன்பே நான் அறிந்திருந்தேன். 2002ம் ஆண்டு சிங்கப்பூர் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் உலகம் முழுதும் எழுதப்படும் தமிழ்ப் படைப்புகள் நேற்றும் இன்றும் நடக்கிற வழித்தடங்களை வரைந்துகாட்ட முற்ப்பட்டேன். அதற்காக உலகின் பல பகுதிகளில் எழுதப்பட்ட படைப்புக்களை ஒரு சேர வாசிக்கிற அனுபவம் எனக்குக் கிடைத்தது. ஒரு வாசகன் என்ற முறையில் அது எனக்குக் கிடைத்தப் பெரும் பேறு. ஒரு பேரானந்தம்.


சிங்கைத் தமிழ் இலக்கிய முன்னோடிகள், அவர்களது படைப்புக்கள் பற்றி எனக்குக் கடுகளவு அறிந்திருந்தேன். சமகாலப் படைப்பாளிகள், அதிலும் இளைய த்லைமுறையினர் என்ன எழுதுகிறார்கள் என அறிந்து கொள்ள் ஆர்வமாக இருந்தேன். நண்பர் ஆண்டியப்பன் சில நூல்கள் அனுப்பி வைத்திருந்தார். நூல்களாகத் தொகுக்கப்படாத, நூலாகக் கொண்டுவரும் அளவிற்கு எழுதிக் குவித்திராத எழுத்துக்களைப் படிக்க எண்ணிய போது, நண்பர் பிச்சினிக்காடு இளங்கோ அனுப்பியிருந்த சிங்கைச் சுடர் இதழ்கள் கிடைத்தன. அதில்தான் எனக்கு ஜெயந்தியினுடைய நுடம் படிக்கக் கிடைத்தது. அந்தக் கதை மேற்கொண்டிருந்த உளவிய்ல் அணுகுமுறை சிந்தையை ஈர்த்தது.


ஜெயந்தி சங்கரின் கதைகள் எல்லாவற்றிலும் இந்த சிந்தனையைத் தூண்டும் அம்சத்தைப் பார்க்கலாம். வெறும் கதை சொல்கிற சுவாரஸ்யத்திற்காக அவர் எழுதுவதில்லை. கதையில் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிற கலை நுட்பங்களைக் காப்பாற்றுவதற்காக அவர் எழுதுவதில்லை. வெகுஜனப் பத்திரிகைகள் ஆதரிக்கிற கதையம்சம், சிற்றிதழ்கள் வலியுறுத்துகிற கலைநுட்பம் இவற்றைத் தாண்டிய கதைகள் இவை. அதற்காக இவை இந்த அம்சங்களில் கவனம் செலுத்தாத அல்லது அக்கறை காட்டாத கதைகள் என்பது அர்த்தம் அல்ல. அவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு, அவற்றையும் திறமையாகக் கையாண்டு, ஆனால் அவற்றையும் தாண்டிக் கதைகளை எடுத்துச் செல்கிறார் ஜெயந்தி.
புலம் பெயர்ந்து வாழ்கிற தமிழர்கள் பலர் தங்களது மொழி அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டும், தங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டும் இலக்கியத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் தவறொன்றும் இல்லை. அது வரவேற்கப்பட வேண்டியதும்கூட. ஆனால் அவை பெரும்பாலானோரது விஷயத்தில் ஆரம்ப வசீகரங்களாக முடிந்து போகின்றன.வயது ஏற ஏற வாழ்வு வேறு இலக்குகளைத் தேடுகிறது. அதன் காரணமாக அவர்கள் சாதனைகள் ஏதும் செய்யாது மறைந்து போகின்றனர்.


ஆனால் ஜெயந்தி சாதிப்பார். ஏனெனில் அவர் அடையாளம் த்ருவதற்கோ, அடையாளம் பெறுவதற்கோ எழுதுவதில்லை. அவர் சிந்தனையைப் பகிர்ந்து கொள்ளவும், சிந்தனையைத் தூண்டவும் எழுதுகிறார். ஆற்றில் மிதந்து செல்லும் மலரல்ல அவர். நதியின் மடியில் கால் பதித்து நிற்கும் கற்பாறை அவர்.
சிங்கைத் தமிழ் எழுத்துகளின் மீது உலகின் கவனத்தை ஈர்க்கக்கூடியவர்களில் ஒருவராக ஜெயந்தி சங்கர் திகழ்வார். அவருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.


18-09-05

நாலேகால் டாலர் - வாழ்த்துரை - ரெ.கார்த்திகேசு

தமிழ்ச் சிறுகதைகள் இன்று உலகத்தின் பல இடங்களிலிருந்து எழுதப்படுகின்றன. தமிழ்ப் புத்திலக்கியம் தனது தமிழ்நாட்டுப் புராதனப் பின்புலன்களிலிருந்து விடுபட்டு, உலகப் பின்புலன்களைக் காட்ட ஆரம்பித்துள்ளது. இது தமிழ்ப் புத்திலக்கியம் உலக மயமாவதன் தொடக்கத் தருணம் என்று கூறலாம்.


புலம் பெயர்ந்த இலங்கை எழுத்தாளர்கள் இந்த விரிவாக்கத்தைத் தொடக்கி வைத்தார்கள். முத்துலிங்கம் போன்ற இலங்கைவாசிகள் எப்படித் தாங்கள் உலகவாசிகள் னார்கள் என்ற கதைகளை அழகாக வடித்து வைத்தார்கள். சுஜாதா தன் இந்திய இருப்பிடத்தை விட்டுப் புலம் பெயராமல், அமெரிக்காவுக்குப் பெயர்ந்தவர்களை எட்டி எட்டிப் பார்த்து விட்டுப் பின்புலத்தைக் கொஞ்சமாக மாற்றினார். புலம் பெயர்ந்து வாழ்ந்து, அமெரிக்க அனுபவங்களை முற்றாக உள்வாங்கி காஞ்சனா தாமோதரன் எழுதி வருகிறார். நா. கண்ணன் ஜெர்மனியில் வாழ்ந்து அந்த வாழ்க்கையின் அனுபவங்களைச் சிறுகதைகளில் பிழிந்து வைக்கிறார். அண்மையில் இரா.முருகன் கணினி மென்பொருள் துறை இந்திய இளைஞர்களிடையே ஏற்படுத்தியுள்ள மாபெரும் மாற்றங்களை வைத்து அவர்கள் இங்கிலாந்துக்கும் தாய்லந்துக்கும் அமரிக்காவுக்கும் அலையும் வாழ்க்கையை அழகான கலைப் படைப்பாக்கித் தந்துள்ளார்.


இப்போது ஜெயந்தி சங்கர்.


மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் உள்ள தமிழ் எழுத்தாளர்களாகிய நாங்கள் எங்கள் சுகமான மூலைகளுக்குள் இருந்தவாறு எங்களுக்குக் கைவந்ததை எழுதி வந்தோம். இதைப் பொதுவான தமிழ் உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை என்றாலும் எங்களுக்குள் நாங்கள் பாராட்டிச் சீராட்டி வைத்துக் கொள்வதில் குறைவில்லை. 130 ண்டுகளுக்கு முன்னால் எங்கள் முதல் தலைமுறைக் குடியேற்றக்காரர்கள் தொடக்கி வைத்த ஒரு பாரம்பரியத்தை இப்போது நாட்டின் குடிமக்களாகிய நாங்கள் தொடர்ந்து வருகின்றோம் என்ற பெருமை எங்களுக்கு இருந்தது.


ஆனால் சிங்கப்பூர் தனது பொருளாதாரத்தைக் காப்பாற்றவும் முன்னேற்றவும் தமிழ் நாட்டிலிருந்து ஒரு "இரண்டாம் குடியேற்றக்காரர்கள்" அலையை ரம்பித்து வைத்து தமிழ்நாட்டிலிருந்து ட்களைக் கொண்டுவந்ததும், அதில் ஒரு சிறுபகுதியினர் நல்ல தமிழ்ப் படைப்பாளர்களாக இருந்ததும், அவர்கள் சிங்கப்பூர் அடையாளத்துடன் எழுத ஆரம்பித்ததும் அங்குள்ள தமிழ் எழுத்தாளர்களின் நித்திரையைக் கொஞ்சம் கெடுத்திருக்கிறது. இந்த இரண்டாம் குடியேற்றக்காரர்கள் வெகுவிரைவில் அவர்கள் நாட்டுக்கு அளிக்கும் பங்குக்கு ஏற்ப நிரந்தரவாசமும் குடியுரிமையும் அளிக்கப்படுவது, அவர்களுக்கும் அசல் சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கும் உள்ள வேறுபாடுகளையும் அழித்துவிட்டிருக்கிறது.


இதை மலேசியாவில் இருந்து நாங்கள் கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் மலேசியாவின் குடியிறக்கக் கொள்கைகளும், அதன் தீவிரப் பொருளாதாரத் தேவைக்கேற்பத் தளர்வாகி வருகின்றன. நடப்பு அனைத்துலக அரசியலில் பாரம்பரியமாக தொழிலாளர்களை அளித்து வந்த நாடுகள் பின் வாங்குவதால் தொழிலாளர்களைச் சுதந்திர உலகச் சந்தையிலிருந்து தருவிக்கலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆகவே தமிழ்நாட்டிலிருந்தும் அதிகத் தொழிலாளர்கள் இங்கு வரத் தொடங்கினால் அதில் நிச்சயம் நல்ல படைப்பாளர்கள் இருப்பார்கள். (ஏற்கனவே இருக்கிறார்கள்.) ஆகவே சிங்கப்பூருக்கு ஏற்பட்டதே எங்களுக்கும் ஏற்படும். "மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்" என்ற எங்கள் அடையாளத்தின் நிர்ணயங்களை நாங்கள் மிகவும் விரிவு படுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே அந்த அடையாளத்தை மலாய் மொழியில் எழுதும் தமிழ் எழுத்தாளர்களோடு நாங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலைமை வந்திருக்கிறது.


இப்படிச் சில தயக்க உணர்வுகளோடுதான் ஜெயந்தியின் படைப்புக்களை நான் படிக்க ஆரம்பித்தேன். னால் படித்து முடித்தபோது ஜெயந்தி போன்றோரின் வரவு இந்த சிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கியத்துக்கு மிகப் பெரிய ஆதாயமே தவிர அபாயம் இல்லை என்பது தெளிவாகிற்று.


சிங்கப்பூர் இனி எழப்போகும் புதிய தமிழ்ப் படைப்பிலக்கியத்துக்கு ஒரு சோதனைக் களம் என்று சொல்லலாம். தமிழ் படைப்பிலக்கியத்தின் ஜென்மபூமி கிராமமாக இருந்து வந்தது. தி.ஜா. போன்றவர்கள் அதனை அற்புதமாகப் பயன் படுத்தினார்கள். புதுமைப் பித்தன், கல்கி, ஜெயகாந்தன் (வகைக் கலப்புக்காக இந்த வரிசை) கியோர் சென்னை, மதுரை போன்ற நகர வாழ்க்கை பற்றி எழுதினாலும் அவை தமிழ்நாட்டு கிராமவாசம் மாறாத நகர்களேயாகும்.


ஆனால் உலகப் பொருளாதாரத்தில் கிராமத்தின் இடம் குறைந்து வருகிறது. இந்தியாவிலும் கூட விரைவில் நகரங்களில் வாழுவோர் எண்ணிக்கை கிராமங்களில் வாழுவோர் எண்ணிக்கையைத் தாண்டும்.


ஜெயந்தி வாழுகின்ற சிங்கப்பூரில் கிராமங்கள் கிடையாது. "ஏழைகள்" என்ற ஒரு வகுப்பினர் கிடையாது. இந்த இரண்டு விஷயங்களும் சேர்ந்து அங்கு தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் பின்புலப் பாரம்பரியத்தைப் புரட்டிப் போட்டுவிட்டன.
ஜெயந்தி இந்தப் புதிய சவால்களை மிகச் சாதுர்யமாக எதிர் கொண்டுள்ளார். அவரின் எழுத்துக்களில் நகர நெருக்கடிகளும் மன அழுத்தங்களும் செல்வச் செழிப்புக்கிடையில் வாழ்க்கை வக்கிரமாகிவிடுவதும் மிக யதார்த்தமாக வந்துள்ளன. இனி குவால லும்பூரிலும் சென்னையிலும் டெல்லியிலும் லண்டனிலும் தமிழர் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் எழுத்துக்கள் எப்படியிருக்கும் என்பதை இவரது கதைகளை வைத்தே யூகித்துவிடலாம் போலிருக்கிறது.


இவர் கதைகளைத் தொகுத்துள்ள வரிசை முறையில் அமைந்துள்ள முதல் இரண்டு கதைகளும் முதன்மை இடம் பெறுவது பொருத்தம். "நாலேகால் டாலர்" கதையில் பேரங்காடியில் ஒரு வாழ்த்து அட்டைக்கு பணம் செலுத்த மறந்து விட்ட கதைத் தலைவி அடைகின்ற அவமானமும் மன வேதனையும், "ஈரம்" கதையில் திடீரென நின்றுவிட்ட மின்தூக்கியில் பயத்தால் மூத்திரம் பெய்துவிட்ட தமிழ்நாட்டு வீட்டுப் பணிப் பெண்ணுக்கு ஏற்படும் அதே அனுபவங்களும் நகர வாழ்க்கையில் மட்டுமே நடக்கக் கூடியன. இந்த அப்பாவிப் பெண்கள் இழைத்துவிட்ட இந்தத் தவறுகளை இப்படிப் பெரிது படுத்த ஈரம் வற்றிவிட்ட நகர ஒழுங்கு முறை அமைப்புமுறையில்தான் முடியும்.


இனி தொடர்ந்து வருகின்ற கதைகளிலும் நகரம், நமக்குப் பழகிவிட்ட வாழ்க்கை முறைகளை, உறவுகளை எப்படியில்லாம் விகாரப் படுத்திவிட்டது என்பதைத்தான் அவ்வந்த வாழ்க்கை முறைகளின் யதார்த்தம் குலையாமல் ஜெயந்தி சொல்லுகிறார்.
"பந்தயக் குதிரை" கதையில் சிங்கப்பூரில் படிக்கும் குழந்தைகளின் மன நெருக்கடிகளும், அவற்றுக்கிடையில் தமிழ் படிக்கப் படும் வேதனைகளும் கூறப்படுகின்றன. இது செய்தி; யதார்த்தம். ஆனால் அந்த யதார்த்தத்தை நுண்ணிய கற்பனையோடு நயமாக அளிக்க முடிந்திருப்பதுதான் ஜெயந்தியின் வெற்றி.
பள்ளியில் பரிட்சை நடக்கும் நேரம். போகிற வழியில் விபத்தில் அகப்பட்டுக் கொண்ட புறாவை இந்த மாணவன் பார்க்கிறான். தேர்வு பொருளாதார வாழ்க்கையின் கட்டாயத் தேவை. ஆனால் புறாவின் நிலைமை மனிதநேயத்தோடு சேர்ந்து மனதை அலைக்கழிக்கிறது. இதனை ஒரு ஓட்டப் பந்தய வேகத்தில் அவர் சொல்லுகிறார்:
"தேர்வா, புறாவா? குதிரை. தேர்வு தான், தேர்வு தான், மனம் அலறியது. ஆனால் பாவம், அதற்கென்னவானதோ? அந்தச் சிறிய பறவை உயிர் பிழைத்ததா தெரியவில்லையே. 'புறாவா தேர்வா?' - உறுமியது குதிரை. தேர்வு தான், தேர்வு தான். 'சரி பின் என்ன யோசனை, சீக்கிரம் வீட்டுக் கதவைத் திறந்து படிக்க ஆரம்பியேன். இல்லையென்றால், பத்தயத்தில் தோல்விதான் உனக்கு,..ஆமாம், நினைவிருக்கட்டும்,..ம் ,..ஓடு, ம்'. மதிப்பெண்கள் ஓடு, ம், புள்ளிகள்,..ஓட்டம், ஓட்டம், ஓட்டம், முடிவற்ற ஓட்டம்..."


"நுடம்" கதையில் ஒரு குழந்தையின் மன அழுத்தமும் அதற்குத் தாயின் கவனிப்புத் தேவையாவதையும் அம்மாவை நொண்டியாக வரையும் குழந்தை மூலமான மனோதத்துவக் கதையாக ஆக்கியுள்ளார். "திரிசங்கு" கதையில் அப்பாவும் அம்மாவும் பிரிந்து வெவ்வேறு திருமணம் செய்து கொண்ட கதையின் சிக்கலான பின்னல்கள் ஒரு சிறுபிள்ளையின் வெகுளிப் பார்வையிலிருந்து அளிக்கப்படுகின்றன.
நகரச் சூழ்நிலையிலும், அங்கு வாழ்க்கை நடத்த வேண்டிய பொருளாதாரப் போட்டி மனப்பான்மையிலும் மன ஈரம் வற்றிப்போகும் நிலைமையைத்தான் ஜெயந்தியின் பெரும்பாலான கதைகள் சொல்லுகின்றன. பொருளாதாரக் குதிரை அடிபட்டு விழும் மனிதநேயப் புறாவை மிதித்துக் கொண்டு ஓடுகிறது.


ஆனால் ஜெயந்தி தரும் செய்தி இவற்றின் அடிநாதமாக இந்தச் சூழ்நிலையிலும் மனிதநேயம் வற்றிப் போய்விடக் கூடாது என்பதுதான். பொருளாதாரத்தின் இயந்திரப் பற்களிடையே மனதின் மென்மை சிக்குண்டு விடக்கூடாது என்னும் எச்சரிக்கைகள் தெளிவாக இருக்கின்றன.


ஜெயந்தியின் கதை சொல்லும் முறை மிகச் சரளமானது. சம்பவப் பின்னல்கள் கதையோட்டத்தின் தேவைக்கேற்ப சுருக்கமாகவும் நுணுக்கமாகவும் அமைகின்றன. அவருடைய கதைகள் திறமான நெசவுகள். படிக்கப் படிக்கப் பட்டுப் போல் மனதில் வழுக்கி ஓடுகின்றன.


தமிழ்ச் சிறுகதைகள் நகர மயம் ஆகுதலும் உலக மயம் ஆகுதலும் நிகழும்போது அழுத்தமாகச் சொல்லப்பட வேண்டிய செய்திகள் எவை என்பதற்கு ஜெயந்தியின் கதைகள் முன்னுதாரணங்களாக அமைந்திருக்கின்றன.


வாழ்த்துக்கள்.

30 July 2005

நாலேகால் டாலர் - கருத்துரை - அருணா ஸ்ரீநிவாசன்

வாழ்க்கையில் நாம் தினசரி சந்திக்கும் பல தருணங்களை மிகத் தத்ரூபமாக விவரித்து எழுதப்பட்ட கதைகள் இவை.

ஜெயந்தி சங்கரின் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் அவரது இயல்பான நடையும், ஒவ்வொரு கதையிலும் அவர் கோடிட்டுக் காட்டும் மனித சுபாவங்களும், மனிதத்தின் மேன்மையும்.

செய்தித்தாள் ஒன்றில், வியாபார நோக்கோடு வெளியிடப்பட்டு ஒரு சிறுவனின் வாழ்க்கையில் விளையாடிய ஒரு செய்தியாகட்டும், ( நிஜமற்ற நிழல்) விவாகரத்து செய்து தன்னையும் குழந்தைகளையும் கைவிட்டக் கணவனுக்குத் தன் வளர்ந்த மகன் சிறுநீரகம் கொடுக்க முனைவதைப் பார்த்து தவிக்கும் தாயுள்ளத்தில் புதைந்திருக்கும் அடிப்படை மனிதம் கடைசியில் வெல்வதாகட்டும் ( தெளிவு), எல்லாக் கதைகளிலும் மென்மையாக இந்த உணர்வு இழையோடுகிறது.

குழந்தைப்பேறு ஆகி, தையல் போட்ட இடத்தில் வலி, ப்ரசவ வலியைவிட அதிகமாக இருப்பதாகப் பல பெண்கள் உணர்வார்கள். " அமிலத்தை ஊற்றியதைப்போலக் கடும் எரிச்சல். இது தினமும் இரண்டு வேளை. அந்த நர்ஸ் கையில் தேவையான உபகரணங்களுடன் ஒவ்வொரு அறையாக வருவது தெரியும் போதே சுதாவிற்கு எங்காவது ஓடி விடலாமா என்றிருக்கும். படுக்கையை விட்டு எழவே சிரமம். இதில் எழுந்து ஓடவாவது." தையல் கதையில் உள்ள இந்த வரிகள் போல் விவரிக்கும் சூழ்நிலை சீரியஸாக இருந்தாலும் மெல்லிதாக இயல்பாக ஓடிக்கொண்டு இருக்கும் நகைச்சுவை முறுவலைக் கொண்டுவருகிறது. அதேபோல் மனசை நெகிழ்விக்கும் விவரிப்புகள். இந்தக் கதையில் வரும் பெண்ணின் பிரசவ அனுபவம் படிக்கும் எந்தத் தாய்க்கும் தன் அனுபங்களை நிச்சயம் நினைக்காமல் இருக்க முடியாது. வரிக்கு வரி தத்ரூபமாக உணர்ந்து எழுதியுள்ளார்.

நாலேகால் கால் டாலர் கதையில் அந்தப் பெண் இருக்கும் சூழ்நிலையில் யாருமே இடிந்து, கலங்கிப்போவார்கள். ஆனாலும் ஜெயில் அதிகாரிகள் தன் நகைகளைக் கழட்டித் தரச் சொல்லும்போது, கழலாத தன் மூக்குத்தி பற்றி அவளுக்கு அந்தச் சூழ்நிலையிலும் சிரிப்புதான் வருகிறது. "தோட்டைக் கழற்றியதுமே மூக்குத்தியையும் கழற்றிவிட நினைத்து மூன்று முறை முயன்றதில் மூக்குக் குடைமிளகாயாகச் சிவந்ததே தவிர மூக்குத்தியின் மறை அசைந்தே கொடுக்கவில்லை. ப்ளஸ் டூவில் குத்தியபோது டாக்டரே திருகியதுதான், பிறகு பதினாறு வருடத்தில் விதவிதமாக மூக்குத்தியணியும் சிநேகிதிகளைப் பொறாமையோடு பார்த்து என்னுடையதைக் கழற்ற முயன்று ஒவ்வொருமுறையும் தோற்றே வந்திருந்தேன். இந்தக் கதையையெல்லாம் சொன்னால் அந்தச்சீனனுக்குப் புரியுமா? நானும் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி முழுமையாக முயன்றேன். ஹ¥ஹ¤ம்,.. முடியவேயில்லை." இப்படி ஆங்காங்கே இக்கட்டிலும், சிறப்பான நேர்மறையான எண்ண ஓட்டங்களை அள்ளித் தெளித்தபடி கதையோட்டம் நகருவது, கதை சொல்லும் பாணியில் ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை.

இதே கதையில் கடைசியில் சொல்லப்படும் "பலவீனமாயிருந்த என் மறதியே என் பலமானது." என்பதும், MC என்ற கதையில் இந்த இரண்டு எழுத்துக்கள் பிரதிபலிக்கும் அர்த்தம் பொதிந்த ( Male Chauvinist & Medical Certificate ) வார்த்தைகள் போன்றவை ஜெயந்திக்கு வார்த்தைப் பிரயோகத்த்தில் உள்ள ஆழத்தை உணர்த்துகிறது.

"..- பகலெல்லாம் வேலைக்கான ஆயத்தங்களில் கழியும். இரவு மற்றவர்கள் தூங்கப்போனதும் தான் இவர் தன் வேலையையே ஆரம்பிப்பார். ப்ளாஸ்டர் •ப்பாரிஸில் தொடங்கி, பேப்பர் மேஷில் தொடர்ந்து, சிமெண்ட் வரை பலதரப்பட்ட வஸ்துக்களைக் குழைத்துப் பொம்மைகள் செய்வார். வடிவம் வந்ததும், வர்ணங்கள் பூசுவார். திசங்கர் ஓரளவு சங்கரரைப்போலவே இருப்பார். சற்று பருத்தோ இளைத்தோ இருந்தாலும் சுமாராய் ஆதிசங்கரர் என ஒப்புக் கொள்ளும்படியே இருக்கும் பொம்மை. சில சமயம் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு தன் பெண்ணிற்கோ அல்லது நாட்டுப்பெண்ணிற்கோ அவர்களுக்கு அது தேவையா அல்லது பிடிக்குமா என்பதை லட்சியம் செய்யாது வரலக்ஷ்மிவிரதத்திற்கு மண்டபம் செய்வார்..." அப்பா என்ற கதையில் வரும் இந்தக் குணச்சித்திரம் வெகு அருமை.

ஈரம் என்ற கதையில், " இரண்டு நாட்களிலேயே பெரியவனிடமிருந்து போன் வந்தது. மகிழ்ச்சியோடு 'வந்துடும்மா', என்று சொல்வானென்று எதிர்பார்த்துப் போனைக் கையில் வாங்கினேன். எடுத்ததுமே, "ஏம்மா, இப்ப என்ன ஆயிடுச்சுன்னு திடீர்னு கிளம்பி இங்க வரேங்கற?", என்றதும் வாயடைத்து நின்றேன்" என்ற வரிகளில், சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்யப்போன தன் அம்மா ஒரு இக்கட்டில் மாட்டிக்கொண்டு இந்தியா திரும்ப ஆசை தெரிவிக்கும்போது, மகன்கள் தன்னை ஆசையுடன் "வா" என்பார்கள் என்று எதிர்பார்த்த தாயின் ஏமாற்றத்தில் வாழ்க்கையின் நிதர்சனம் பளிச்சிடுகிறது.

ஒவ்வொரு கதையையும் படிக்கும்போது சிங்கப்பூரில் வாழும் புலன் பெயர்ந்த தமிழ்க்குடிமக்களின் வாழ்க்கை முறையும், ஒரு நடுத்தர சமூகத்தின் எதிர்பார்ப்புகள், ஆசைகள், வாழ்க்க முறை, சவால்கள் என்று ஒரு கலைடாஸ்கோப்பில் பார்ப்பதுபோல் பல கோணங்கள் தெரிகின்றன. ஒரு பைனாகுலர் வழியாக அல்லது மைக்ரோஸ்கோப் வழியாக நாம் ஒரு நடுத்தர வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களையும் கூர்ந்து கவனிக்கிறார்போல், அல்லது அவர்கள் வாழ்க்கையில் நாம் மௌனமாக ஒரு அங்கம் வகிப்பதுபோல் ஒரு உணர்வு - எல்லாக் கதைகளிலுமே. ஒரு சிறந்தப் படைப்பின் முக்கிய அம்சம் இதுதான். ஜெயந்தியின் கதைகளில் இதை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது.

22-07-05

நாலேகால் டாலர் - ஒரு பார்வை - ஜே. எம். சாலி

ஒரு பார்வை



மண் வாசனையில் பிடிப்பு அதிகம் உண்டு. பிறந்து வளர்ந்த நாட்டுப் புற மண்ணும் வாழும் மண்ணும் உணர்வில் கலந்தவை. முதல் பொருள், கருப்பொருள், உரிபொருள் என்று ஆசிரியர் சொல்லிக் கொடுத்தவை அப்போது உரைக்கவில்லை. வளர வளரத் தான் உள், வெளிப் பார்வைகளை அவை விரிவுபடுத்தின. மண் வாசனைக்குள் அவை அடக்கம்.

பார்வை விஷயமும் அப்படித்தான். உணர்வுகளைப் படம் பிடிக்கவும், வார்த்தைச் சித்திரம் வடிக்கவும் வித்தியாசமான பார்வை வீச்சு வேண்டும். இரண்டு பார்வையும் சற்று விரிவாக இருந்தால் படைப்பாலியாகிவிடலாம்.

எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் சிறுகதைகளைப் படித்த போது இந்த உணர்வுகளே முகம் காட்டின.

கற்பனை இல்லாமல் கதை, கவிதைகளைப்படைக்க முடியாது என்ற வாத, விவாதங்கள் காலம் கடந்தவை. பார்ப்பதை, உணர்வதை எழுத்தால் பதிவு செய்தாலே அது படைப்பாகிவிடும். ஆக, யதார்த்தத்தின் மறுபக்கமே இலக்கியம். உள், வெளிப்பாவைகள் அல்லது உணர்வுகளின் பரிமாணமே இலக்கியத்தின் இலக்கணம். அப்படி நீங்கள் பார்க்கும் மனிதரெல்லாம் பாத்திரங்களே. மண் வாசனையை மறந்துவிடக் கூடாது. களம், தளம், பின்னணி என்பதெல்லாம் அதன் மறுபெயர்தான்.

வாசகன் பத்திரிக்கையாளன் அல்லது நடுவர் எனும் பலமுனைப் பார்வையுடன் கதை கவிதைகளைப் படிக்கும் பழக்கம் நீண்ட காலமாக உண்டு. நாற்பது ஆண்டுக்கு முந்திய சிங்கப்பூர் மக்களையும் மண் வாசனையையும், வளர்ந்த நாடான இன்றைய குடியரசின் தலைமுறை, வளங்களையும் அறிந்தவன் என்பதால் சிங்கப்பூர் பின்னணியில் எழுதப்படும் சிறுகதைகளை அக்கறையுடன் படிப்பது வழக்கம்.
ஜெயந்தி சங்கர் சிங்கப்பூர் பின்னணியில் அவ்வப்போது உள்ளூர் இதழ்களில் எழுதிய சிறுகதைகளைப் படித்து வந்திருக்கிறேன். இணைய இதழ்களிலும் அவருடைய சிறுகதைகள் இடம் பெற்று வருகின்றன.

சாங்கி விமான நிலையம், புக்கித் பாத்தோக், அங் மோ கியோ, குட்டி இந்தியா, டான் டோக் செங் மருத்துவமனை,.. போன்ற பல இடங்களைக் கதைக் களமாக்கி இருக்கிறார், ஜெயந்தி சங்கர். பல இன சமூகப் பாத்திரங்களையும் உலவவிட்டிருக்கிறார்.

மற்றொன்று கதை வடிவம். சிறுகதையின் நீளம், அளவு பற்றிய சர்ச்சை அதிகரித்துள்ள கால கட்டம் இது. இது வெகுஜன பத்திரிக்கை, சிற்றிதழ், இலக்கிய இதழ் என்ற விவாதங்களும் வெகுவாக தலையெடுத்துள்ளன. உலகளாவிய இணைய இதழ்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இரண்டு மணிநேரம் படிக்கக்கூடிய அளவில் கூட சிறுகதை இருக்கலாம். என்று ஐம்பதாண்டுகளுக்கு முன் கூறப்பட்டதை அறிவேன். இரண்டொரு பக்கங்களில் சிறுகதை இருந்தால் போதும் என்ற நிலை இன்று உருவெடுத்திருக்கிறது.

இந்த சர்ச்சைகளுக்கு அவருடைய சிறுகதைகள் விடையளிக்கின்றன.
இத்தகைய போக்குக்களுக்கு ஈடுகொடுத்து எழுதி வருகிறார் ஜெயந்தி சங்கர்.
தக்கவர்கள் இத்தொகுப்புக்கு ஆய்வுரை, முன்னுரை வழங்கியுள்ளனர். எனவே, நீளமான கருத்துரை எழுத நான் முற்படவில்லை. தமது படைப்புகளைத் தொகுத்து நூலாகக் கொணரும் அவருடைய முயற்சியை வரவேற்று வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.


அன்புடன்,
ஜே. எம். சாலி
சிங்கப்பூர்
02-08-05

நாலேகால் டாலர் - நூல் அறிமுகம் - புஷ்பா தங்கதுரை

வாங்கிப் படியுங்கள்



சிங்கப்பூரின் •புனான் செண்டரில் ஆறாவது மாடியில் 'சேலஞ்சர்' கம்ப்யூட்டர் நிறுவனம். ஒவ்வொரு முறை போகும்போதும் சேபஞ்சரில் நிறைய மணி நேரம் செலவழிப்பேன். கால்கள் கெஞ்சும். ஒரு சமயம், ஒரு பகுதியை விட்டு இன்னொரு பகுதி போகிறேன் என்று நினைத்து வாசலைக் கடந்தபோது அபாய மணியடித்து உடனே திரும்பினேன். கவுண்டரிலிருந்த சீனப் பெண்மணி என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். எதுவும் சொல்லவில்லை. நான் வாங்கிக் கொண்ட சாமான்களுக்குப் பணம் கொடுக்காமல் போகிறேன் என்று அந்த அபாய மணியடிக்கிறது.




இப்போதும் நான் சேலஞ்சர் போகும்போதெல்லாம், என்னைப் போல் யாராவது ஒருவர் வெளியில் போவதும், அபாயம் அலறுவதும், மன்னிப்புடன் அவர் உள்ளே திரும்புவதும், பலமுறை பார்த்திருக்கிறேன்.



இது ஒரு ரக அனுபவம். இது போன்ற பல ரக அனுபவங்களை சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் ஜெயந்தி சங்கர் வாயிலாகப் படிக்கும் போது அருமையான சுவை ஏற்படுகிறது. புதுமை அனுபவமே ஒரு புதுமையான கதையாக மாறும். ஜெயந்தி சங்கர் அவரது புதுமையான அனுபவங்களை அழகாக உள்ளைத்தைத் தொடும்படி கதைகளாக வடித்துள்ளார். தாமே விலகி நின்று தம்மையே மூன்றாம் நபராக ஒரு ரசனையோடு பார்த்து எழுதுவது நல்ல கலை. அதுவும் ஒளிவு மறைவின்றி அப்படியே தத்ரூபமாக வர்ணிப்பது படிப்பவர் மனங்களை ஈர்த்து விடும். இந்த நீதியில் 'நாலேகால் டாலர்' நெகடிவ் சிங்கப்பூருக்கு ஓர் எடுத்துக் காட்டு. பதைபதைப்புடன் படிக்கிறோம்.



அதைப்போலவே 'ஈரம்' என்ற கதை ! ஈரத்தில் லிப்டில் நிகழ்ந்த நிகழ்ச்சி அவருக்கே முழுவதுமாகத் தெரியாமல் இருக்க, அதனால் ஏற்படும் கடின சோதனைகள் மற்றொரு நெகடிவ் சிங்கப்பூர். சம்பவங்களைச் சுற்றி எழுந்துள்ள கதைகளைத் தவிர, 'தையல்', 'நுடம்', 'திரிசங்கு', 'அப்பா' போன்ற குடும்பரீதியான கதைகள் சிங்கப்பூர் பின்னணியில் ஆசிரியையின் மனப்பின்னல்களுடன் வரும் அழுத்தமான சித்திரங்கள். 'எம்.ஸீ தருகிறேன்' என்று சீன டாக்டர் கிண்டலாகச் சொல்ல அதையும் கேட்கிற அந்தக் குடும்பப் பெண்ணுக்கு அது எத்தனை துன்ப உணர்வைக் கொடுக்கிறது, 'எம்.ஸீ' கதையில்.



'மிருகன்' என்ற கதையில் சட்டம்'ஒழுங்கு உள்ள அந்த நாட்டிலும் அப்படி நடக்கிறதே என்று நம்மை நினைக்க வைக்கிறது.
முதலில் தனித் தனிக் கதைகளாகப் படிக்கப் போக, பிறகு கதைகளின் சுவையிலும் அமைப்பிலும் நடையிலும் கவரப்பட்டு எல்லாக்கதைகளையும் படித்து முடித்தேன்.



'பசி ஆறுதல்', 'காடி', 'ஏர்கான்' என்ற சிங்கப்பூர் வார்த்தைகள் மனதில் ஒருவகை உவகை கொடுக்கின்றன. நம் வீட்டு சன்னலிலிருந்து அண்டை வீட்டில் நடப்பதையெல்லாம் அனுதாபத்துடன் கவனிப்பது போல் அவ்வளவு தத்ரூபமாக அமைந்துள்ளன. இதில் வரும் குடும்பக் கதைகள் எளிய சொற்கள், மிகத் துல்லியமாகக் காட்சிகளை வர்ணிக்க ஜெயந்தி சங்கரின் pscheல் புகுந்து வெளிவருவது போல் ஓர் நூதன அனுபவம் கொடுக்கிறது. இந்தக் கதைத் தொகுதி 'ஓர் உணர்வுக் களஞ்சியம்'


நன்றி: இலக்கியப்பீடம் /செப்டம்பர் 2006



ஆசிரியர்: ஜெயந்தி சங்கர்
வெளியீடு: மதி நிலையம்
சென்னை- 600 017
விலை- ரூ.76
பக்கங்கள் -173