Thursday, June 16, 2011

விளிம்பை நோக்கிய நகர்வு - முன்னுரை



- அ.முத்துலிங்கம்


தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் கைகசி என்று ஒருவித கணக்கர் சாதியினர் இருந்தனர். இந்தச் சாதியில் மருமகள் மாமியாருடன் பேசமுடியாது. சமிக்ஞையில் மட்டுமே பேசலாம். நிச்சயமாக அந்தக் குடும்பங்களில் மாமியார் மருமகள் சண்டைகள் மூண்டிருக்க முடியாது. ஆனால், நாளடைவில் இந்த சமிக்ஞை மொழி அழிந்து விட்டது. இதை பாதுகாத்திருந்தால் காது கேளாதவர்களுக்கு உபயோகப்படும் ஒரு சமிக்ஞை மொழியாக இதை வளர்த்தெடுத்திருக்கலாம்.

சில வருடங்களுக்கு முன்னர் 'பெருஞ்சுவருக்கு பின்னே' என்ற தலைப்பில் ஒரு நூலைப்படிக்க நேர்ந்தது. இதை எழுதியவர் சிங்கப்பூரில் வாழும் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர். அவர் அந்த நூலிலே சீனப்பெண்கள் மத்தியிலே புழங்கிவந்த நுஷு மொழிபற்றிக் கூறுகிறார். ஆண்கள் அறியாத இந்த மொழியை சீனப் பெண்கள் தங்களுக்கிடையில் ரகஸ்யமாக வளர்த்து பாதுகாத்து வந்திருக்கிறார்கள். ஆதிக்கமும் அடக்குமுறையும் நிறைந்த ஆண்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கி பெண்கள் தங்களுக்குள் தங்கள் துன்பங்களையும் ஏக்கங்களையும் தாபங்களையும் பரிமாறிக் கொள்ளும் ஒரு மொழியாக இது பல நூற்றாண்டுகள் வாழ்ந்தது. உலகின் ஒரே பெண்மொழியான நுஷு இன்று அழிந்த மொழிகளின் பட்டியலில் சேர்ந்து விட்டது என்ற தகவலை ஜெயந்தி சங்கர் தந்திருந்தார்.

இது எனக்கு வியப்பாக இருந்தது. யார் இந்த ஜெயந்தி சங்கர் என்று தேடத் தொடங்கினேன். இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து சிங்கப்பூரில் வாழும் இவர் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழில் எழுதி வருகிறார். இதுவரை 5 சிறுகதை தொகுப்புகள், 1 குறுநாவல் தொகுப்பு, 4 நாவல்கள், 5 கட்டுரை தொகுப்புகள், மூன்று மொழிபெயர்ப்புகள் (சீன மொழியிலிருந்து ஆங்கிலம் வழி தமிழுக்கு) சிறுவர் இலக்கியம் என்று நிறையவே எழுதியிருக்கிறார் என்பதை அறிந்த போது மலைப்பு ஏற்பட்டது. தமிழ் இலக்கியத்தை நுட்பமாக அறிந்து வைத்திருப்பது போல கர்நாடக சங்கீதத்தையும் கற்றிருக்கிறார். இந்த தொகுப்பில் உள்ள இரண்டு சிறுகதைகளில் இசை பற்றிய இவருடைய நுணுக்கமான ரசனை வெளிப்பட்டிருக்கிறது.

இன்று உலகத்தின் கவனத்தை கவரும் வகையில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பல நாடுகளில் எழுதி வருகிறார்கள். இவர்களில் சொந்த நாட்டு மொழியில் எழுதுபவர்களிலும் பார்க்க ஆங்கிலத்தில் எழுதுபவர்களே அதிகம். இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியுரிமை பெற்று எழுதி பேரும் புகழும் பல பரிசுகளும் பெற்றவர் ஜும்பா லஹிரி. சீனாவில் இருந்து புலம்பெயர்ந்து எழுதி வருபவர் இளம்பெண் யீயுன் லீ. தமிழ் நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் எழுதி வருபவர் அமீன் மேர்சண்ட். நைஜீரிய எழுத்தாளரான உவெம் அக்பானுடைய முதல் புத்தகம் திடீரென்று புகழ் பெற்று தற்போது உலகம் முழுவதும் லட்சக்கணக்காக விற்றுக் கொண்டிருக்கிறது.

இவர்கள் எல்லோருடைய நூல்களும் எக்கச்சக்கமான விற்பனையை எட்டுவதற்கும், உலகளாவிய புகழ் அடைவதற்கும் காரணம் அந்த நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதால் மட்டும் அல்ல. இந்த நூல்களை எழுதிய ஆசிரியர்கள் தாம் புலம்பெயர்ந்து வாழும் நாட்டுச் சூழலை தம் நாட்டு கண்களால் பார்த்து எழுதுகிறார்கள். தம் நாட்டு சம்பவங்களை புலம் பெயர்ந்த கண்களினால் விவரிக்கிறார்கள். அதில் தெரியும் புதுமை வாசகர்களை ஈர்க்கிறது. அவர்கள் படைக்கும் இலக்கியத்துக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் தருகிறது.

இந்த வகையில் தமிழில் சிறுகதை தொகுப்பாக வெளிவரும் ஜெயந்தி சங்கரின் 'தூரத்தே தெரியும் வான் விளிம்பு' நூலை சொல்லலாம். இதிலே பத்து சிறுகதைகள் உள்ளன, அதில் 4 சிறுகதைகள் இந்தியப் பின்னணியிலும், 6 சிறுகதைகள் சிங்கப்பூர் பின்னணியிலும் எழுதப்பட்டுள்ளன. சிங்கப்பூர் கதைகள் ஏன் சுவாரஸ்யமாக இருக்கின்றன என்று பார்த்தால் அவை இந்தியக் கண்களால் பார்த்து சொல்லப்பட்டிருக்கின்றன. அதே போல இந்திய பின்புலக் கதைகளை ஆசிரியர் சிங்கப்பூர் கண்களினால் பார்த்து விவரிக்கிறார். அவை புதுமையாகவும் ரசிக்கும் தன்மையுடனும் இருக்கின்றன.

சமீபத்தில் ஆங்கிலத்தில் எழுதிவரும் இரண்டு புலம் பெயர்ந்த எழுத்தாளர்களை ரொறொன்ரோவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் பகிர்ந்து கொண்ட சில விசயங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவை. அவை ஆச்சரியத்தையும் தந்தன. அவர்களுடைய நாவல் அல்லது சிறுகதைகளில் வரும் பெயர்களைத் தெரிவு செய்வதில் உள்ள சிக்கல். பெயர்களைத் தெரிவு செய்யும் போது அவை உலகத்துக்கு பொதுவானதாக, உச்சரிப்புக்கு இலகுவான பெயர்களாக இருக்க வேண்டும் என்பது. தாங்கள் தெரிவுசெய்த கதைமாந்தர்களின் பெயர்களை பதிப்பகம் பல தடவை நிராகரித்ததாக அந்த ஆசிரியர்கள் சொன்னார்கள். உதாரணமாக 'சின்லீயு' என்று பெயர் வைத்தால் அது வாசகருக்கு ஆணா பெண்ணா என்பதுகூட தெரிந்திருக்க முடியாது, அதை நினைவில் வைக்க வேண்டும் என்றார்கள்.

அடுத்தது அந்த நாட்டு மொழிச் சொற்களை கதைகளில் கையாள்வது. இது நல்ல உத்தி. ஓர் அந்நிய நாட்டுக் கலாச்சாரத்தையும் வாழ்வுப் பிம்பத்தையும் இலகுவில் கதைக்குள் கொண்டு வந்துவிடலாம். ஆனால் அது கறிவேப்பிலை போல கதைக்கு சுவை கூட்டுவதாக இருக்கவேண்டுமே ஒழிய கதையின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கக்கூடாது. கதையின் ஒட்டத்தில் அந்த வார்த்தை புரியும்படியாக இருந்தால் இன்னும் நல்லது. அடிக்குறிப்புகள் வாசிப்பு வேகத்தையும் சுவாரஸ்யத்தையும் கெடுத்து விடும். பல நாவல்கள் சிறுகதைகள் என்று எழுதி அனுபவம் பெற்ற இந்த எழுத்தாளர்கள் சொல்வதில் பெரும் உண்மை இருக்கிறது என்று எனக்குப் பட்டது. ஜெயந்தி சங்கரின் சிறுகதை தொகுப்பில் அடிக்கடி சீன வார்த்தைகள் வந்து விழுந்து வாசகரை திக்குமுக்காட வைக்கவில்லை. பொருள் புரியும் விதத்தில் அவை பொருத்தமான வகையில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. பாத்திரங்களின் பெயர் தெரிவுகளிலும் போதிய அக்கறை தெரிந்தது.

இந்த தொகுப்பில் எனக்கு பிடித்தது இரண்டு விசயங்கள். ஆசிரியர் ஒரு பெண்ணாக இருந்த போதும் பெரும்பாலான அவருடைய கதைகள் ஓர் ஆணின் பார்வையில் எழுதப்பட்டிருக்கின்றன. இதற்கு நிறையக் கற்பனையும் துணிச்சலும் தேவை. இந்தச் சோதனையில் ஜெயந்தி சங்கர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இரண்டாவதாக, அநேகமாக பெண்கள் எழுதும் கதைகளில் முன்தீர்மானங்கள் இருக்கும். கார்ஸியா மார்க்வெஸ் என்ற எழுத்தாளர் இதை calculated literature என்று சொல்வார். என்னத்தை எழுத வேண்டும் என்று எழுத்தாளர் விரும்புகிறாரோ அதை எழுதாமல் இதை எழுத வேண்டும் என்று தீர்மானித்து திட்டமிட்டு எழுதுவது. ஜெயந்தி சங்கரின் சிறப்பு அவருடைய சிறுகதைகள் முன்தீர்மானங்கள் இன்றி தன்னிச்சயாக, இயற்கை உந்துதலில் எழுந்தவை என்பது தான். அவருடைய புனைவுகளைப படிக்கும் போது இது தெளிவாகிறது.

இந்த தொகுப்பிலுள்ள முதலாவது கதை 'தேநீரகம்'. ஒரு சீனக் கிழவர் சொல்வது போல கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அவர் சிறுவனாக இருந்த போது தினமும் ஒரு ரிக்சாக்காரக் கிழவன் வந்து அவனை பள்ளிக்கூடத்துக்கு அழைத்துச் சென்றதை நினைக்கிறான். அப்பொழுது கம்யூனிஸ்டுகள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக கலகம் விளைவித்த காலம். ஒருநாள் கம்யூனிஸ்டுகளை ஆட்சியினர் சுற்றி வளைத்து பிடித்து விடுகின்றனர். அன்று ரிக்சாக்காரக் கிழவன் வரவில்லை. சிதிலடைந்த ஒரு சிறிய கட்டிடம் தான் பகலில் பள்ளிக்கூடமாகவும் இரவில் தேநீரகமாகவும் இயங்கியது. அன்று பள்ளிக்கூடம் மூடியதுடன் தேநீரகமும் மறைந்துவிட்டது. கதையில் ரிக்சாக்காரக் கிழவருக்கு என்ன ஆகிறது என்று தெரிய வரும் போது மனதில் மெல்லிய நெகிழ்வு ஏற்படுகிறது. உலகெங்கும் பரந்திருக்கும் அநீதியும் அதிகார வெறியும் ஒரு கணம் நம் கண்முன்னே தெறிக்கிறது. ஒருவித ஆடம்பரமோ வார்த்தை அலங்காரமோ இன்றி எளிமையாக நேரடியாகச் சொல்லப்பட்ட கதை.

இந்த தொகுப்பில் பல சிறுகதைகள் சிங்கப்பூர் பள்ளிக்கூட, கல்லூரி பின்னணியில் சொல்லப்பட்டிருப்பதை காணலாம். 'மெலிஸாவின் தேர்வுகள்' எனக்குப் பிடித்த இன்னொரு கதை. ரகு என்ற தமிழ் இளைஞன் சொல்வது போல அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கதை சிங்கப்பூர் சமுதாயத்தில் இளம் தலைமுறையினரின் வாழ்க்கை முறையை சித்தரிக்கிறது. மெலிஸா என்ற பெண் அடிக்கடி காதலர்களை மாற்றுகிறாள். ரகு என்ற பையன் மெலிஸாவுக்கும் அவள் காதலிக்கும் சீனப் பையனுக்குமிடையில் ஏற்படும் பிணக்கை தீர்த்து வைக்க முயல்கிறான். மெலிஸா ஒரு காதலனை விட்டுவிட்டு இன்னொரு காதலனுக்கு மாறுவதில் காட்டும் ஆர்வம் அவனை ஆச்சரியப்பட வைக்கிறது. ஒருநாள் மெலிஸாவிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று ரகுவுக்கு வருவதுடன் கதை முடிகிறது. அதிர்ச்சியையும் மெல்லிய சிரிப்பையும் துக்கத்தையும் ஒருங்கே கொடுக்கும் முடிவு.

'எழுபது ரூபாய்' சிறுகதை இந்தியாவில் நடப்பது. அங்கே நடக்கும் சம்பவங்களை சிங்கப்பூர் கண்களினால் பார்ப்பது தான் சிறப்பு. சிங்கப்பூரில் இருந்து விடுமுறைக்காக இந்தியா வந்திருக்கும் நந்தினி என்ற பெண்ணின் கண்களினூடாக கதை நகர்கிறது. ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் ஏற்பட்ட எழுபது ரூபாய் கடனை தீர்க்க முடியாமல் அவஸ்தைப்படுகிறார் நந்தினி. கதாசிரியரின் 'தன்னையறியாமல் லேசாகக் குனிந்து சாலையில் கடந்து போகும் ஆட்டோ ஓட்டுநர்களின் முகத்தையெல்லாம் பார்ப்பவளானாள்' என்ற வசனத்துடன் கதை முடிகிறது. எப்படி யோசித்தாலும் இந்தச் சிறுகதையை இதனிலும் சிறப்பான ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது என்று தான் தோன்றுகிறது.

தொகுப்பிலே எனக்கு ஆகப் பிடித்தது என்று சொன்னால் அது 'தூரத்தே தெரியும் வான் விளிம்பு' என்ற சிறுகதைதான். ஒரு பதினாறு வயதுப் பையன் சொல்வது போல கதை நகர்கிறது. அந்த வயதுப் பையனுக்கு சிங்கப்பூர் போன்ற ஒரு முன்னேறிய நாட்டில் ஏற்படக் கூடிய பிரச்சினைகள், தோல்விகள், அழுத்தங்கள் ஆகியவை அவனில் ஏற்படுத்தும் மாற்றங்களை தமிழ் சிறுகதைக்கு புதுமையான ஓர் உத்தியில் ஆசிரியர் சொல்கிறார். கதை மெதுவாக பிடிகொடுக்காமல் விரிந்து எதிர்பாராத முடிவை அடைகிறது. இப்படியெல்லாம் நடக்குமா என்று வாசகர் கேள்வி கேட்க முடியாதபடிக்கு ஒரு நம்பகத்தன்மையுடன் கதை புனையப்பட்டிருப்பது தான் அதன் வெற்றி.

ஜெயந்தி சங்கரின் கதைகளில் தொடர்ந்து ஒரு சரடுபோல ஓடிக் கொண்டிருப்பது மனிதநேயமும், காருண்யமும், அன்பும் தான். ஓர் ஆசிரியர் தன் பண்பை படைப்பிலிருந்து முற்றிலும் தவிர்க்க முடியாது. எவ்வளவு மறைத்தாலும் ஏதோ ஒரு விதத்தில் கதாசிரியரின் குணாதிசயம் அவர் படைக்கும் கதை மூலமே வெளியே தெரிந்துவிடும். ஒரு முறை தீபாவளி சமயத்தில் சென்னையில் குப்பையோடு குப்பையாகக் கிடந்த வெடிக்காத வெடி ஒன்றை மாடு ஒன்று புல்லுடன் சேர்த்து கடித்தபோது அது வெடித்துவிட்டது. மாட்டின் வாயும் முகமும் சிதைந்துவிட்ட செய்தியை தொலைபேசியில் ஒரு நண்பர் சொல்ல அதைக் கேட்டு ஜெயந்தி சங்கர் அழுதிருக்கிறார். அவருடைய அந்த மென்மையான மனம் இந்த தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதையிலும் வெளிப்பட்டிருப்பதைக் காணலாம்.

இந்தச் சிறுகதை தொகுப்பில் உள்ள அதிகப்படியான சிறுகதைகளுக்கு பொதுவான ஒரு தன்மை இருக்கிறது. இந்தப் பொதுத்தன்மை 'தூரத்தே தெரியும் வான் விளிம்பு' சிறுகதையில் நிறைந்து கிடக்கிறது. இதன் காரணத்தால் தானோ என்னவோ இந்தச் சிறுகதையின் தலைப்புத்தான் தொகுப்பின் தலைப்பாகவும் மிகப் பொருத்தமாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. வில்லியம் ஃபாக்னர் என்ற எழுத்தாளர் சொல்வார், 'ஓர் எழுத்தாளர் தான் எழுதுவதோடு ஒரு காலமும் திருப்தியடைவதில்லை. அவர் படைப்பது எப்பொழுதுமே அவர் மனதில் நினைத்திருந்ததை எட்டுவது கிடையாது. சக எழுத்தாளர்களின் எழுத்தை ஒருவர் வென்றால் போதாது. அவரையே அவர் வெல்லவேண்டும்.'

ஜெயந்தி சங்கர் தொடமுடியாத தூரத்தே தெரியும் வான் விளிம்பை நோக்கி தன் படைப்புகளை நகர்த்தியபடியே இருக்கிறார். இந்தப் பயணத்தில் இன்னும் நிறைய அவர் படைக்க வேண்டும். என் வாழ்த்துக்கள்.


அ.முத்துலிங்கம்
13 அக்டோபர் 2009
ரொறொன்ரோ



சிறுகதைத் தொகுப்பு

ஜெயந்தி சங்கர்

சந்தியா பதிப்பகம்
Address: New No 77,
53rd Street 9th Ave,
Ashok Nagar,
Chennai – 600 083
Tel/Fax: 91-44-24896979
Email: sandhyapublications@gmail.com

கவனம் பெறும் மனப்பிரிகை - நூல் விமரிசனம்




- ஆர்.வெங்கடேஷ்


சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் சமீபத்திய நாவல் மனப்பிரிகை. பல சிறுகதைத் தொகுதிகளையும் கட்டுரைத் தொகுதிகளையும் எழுதியுள்ள ஜெயந்தியின் இந்த நாவல் மீண்டும் சிங்கப்பூர் வாழ்வை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. தேர்ந்த எழுத்து நடையை உடைய ஜெயந்திக்கு, இந்த நாவல் முக்கியமான ஒன்றாக இருக்கும்.
நவீன வாழ்க்கைமுறையில் பல மாற்றங்கள் தொடர்ந்து நடந்துவருகின்றன. உறவுகள், மதிப்பீடுகள், நம்பிக்கைகள் என்று அனைத்திலும் இந்த மாற்றங்கள் தொடர்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த மாற்றங்கள் ஏற்கப்படாமல், தவறாக பொருள் ஏற்படவும் வாய்ப்புண்டு. ஆனால், ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, நூறு ஆயிரமாகி, மாற்றங்களைப் பலரும் ஏற்கும்போது, அதுவே அடுத்த கட்ட வளர்ச்சியாக ஏற்கப்படுகிறது.
குறிப்பாக நமது திருமண முறையில் மாற்றங்கள் ஏற்படுவதைப் பலரும் விரும்புவதில்லை. கணவன் மனைவி என்ற பிணைப்பு எப்போதும் கேள்விக்குட்படுவதில்லை. இதுதான் நமது சமூகத்தின் அடிப்படை அலகு என்பதால் அதனோடு புனிதம் என்ற அம்சமும் கூடுதலாக இணைந்திருக்கிறது.


ஆனால், நவீன் வாழ்க்கை முறை, இதையும் கேள்விக்குட்படுத்தி இருக்கிறது. திருமணம் என்ற பந்தத்திற்குப் பின்னர்தான் சேர்ந்து வாழவேண்டுமா? அதற்கு முன்னர், மனம் விரும்பும் ஒருவரோடு இணைந்து வாழ்வதில் என்ன தவறு? வாழ்க்கையை ஒருவரோடு பகிர்ந்துகொள்ளும் முன்னர், தேர்தெடுத்திருக்கும் காதலர் எல்லாவகையிலும் ஏற்றவர்தானா என்று பார்க்கவேண்டாமா? அதற்காக ஒரு வருடமோ ஆறு மாதமோ சேர்ந்து வாழ்ந்து பார்த்தால் என்ன?


இந்த மாற்றதை ஏற்பவரும் உண்டு, மறுப்பவரும் உண்டு. கலாசாரச் சீரழிவு என்று குதிப்போரும் உண்டு. தீர்ப்புக் கூறுவது இலக்கியத்தின் வேலை இல்லை. ஜெயந்தி இந்த நாவலில் அதைச் செய்யவில்லை. மாறாக, அப்படி வாழ விரும்பும் ஒரு ஜோடியின் வாழ்வை எடுத்து நாவலாக்கி இருக்கிறார். குறிப்பாக, இந்த முயற்சியைத் தமிழ்நாட்டில் செய்துபார்க்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், பல்லின சமூகமான சிங்கப்பூர் சமூகத்தில், அங்கே வாழும் தமிழர் மத்தியில் இந்தப் பழக்கம் இளைஞர்களிடையே தோன்றியிருப்பதை இந்த நாவல் எழுதிச் செல்லுகிறது.


கரு என்ற அளவில், மனப்பிரிகையின் கரு மிக வித்தியாசமான ஒன்று. அதை எப்படி ஜெயந்தி நாவலாக்கி இருக்கிறார்?


நாவலை மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, முதல் பகுதியில் சேர்ந்து வாழ முனைவது வரை கதை செல்கிறது. இரண்டாம் பகுதியில் சேர்ந்துவாழும் அனுபவமும் மூன்றாம் பகுதியில் இருவரும் பிரிந்துவிடும் பகுதியும் வருகிறது.


1. நாவலின் முதல் மற்றும் மூன்றாம் பகுதிகள் நாவலுக்கு எந்த வலுவையும் சேர்க்கவில்லை. அவற்றை நீக்கிவிடலாம். இரண்டாம் பகுதி மட்டுமே மொத்த நாவலையும் தனக்குள் கொண்டிருக்கிறது.


2. நாவல் முழுமையும் புறவயமாகவே நடைபெறுகிறது. இந்த நாவலின் கரு, முழுமையும் அகவயமானது. மற்றவர்கள் எப்படி இந்த உறவைப் பார்க்கிறார்கள் என்பதும் அதற்கு அவர்களுடைய சலனங்கள் என்னவென்றும் தொடர்ந்து பல சம்பவங்கள் மூலம் கட்டிச் செல்கிறார் ஜெயந்தி. அப்பா, அம்மா, தங்கை போன்ற பாத்திரங்கள் இப்படித்தான் கதைக்குள் வருகிறார்கள். ஆனால், கோட்டுச் சித்திரமாகவே நின்றுபோகிறார்கள். அத்தை பாத்திரம் மட்டும் சிறப்புடன் உருவாகி இருக்கிறது.


3. திருமண உறவில் அடிப்படைப் பகுதி, உடலுறவு. குறிப்பாக, இருவருக்கும் உள்ள நம்பிக்கை. திருமணம் என்ற உறவின் மூலம் கிடைக்கும் நம்பிக்கை அது. பெண், தன்னை மலரென இதழ்விரிக்கும் அற்புதம், நம்பிக்கையில் இருந்து வருவது. கணவன் என்ற உறவின் மீது உள்ள நம்பிக்கையில் இருந்து அது வருகிறது. தனக்கானவர் என்ற உறுதியில் இருந்து பிறக்கும் நம்பிக்கை அது. இந்த நம்பிக்கைதான், வாழ்நாள் முழுக்க நீடித்திருக்கப் போவது. இந்த நாவல், இந்த விஷயத்தைத் தயங்கித் தயங்கித் தொடுகிறது. மனரீதியான, உடல்ரீதியான ஒருமை இரண்டும் சேர்ந்து அமைந்தால்தான், திருமண வாழ்வு நிறைவளிக்கும். இதுபோல் சேர்ந்து வாழ்ந்துப் பார்த்து முடிவு செய்யலாம் என்று நினைக்கும் ஜோடிகளிடையே எந்த விதமான அடிப்படையின் மேல், நம்பிக்கையின் மேல், இந்தப் பாலுறவு கட்டப்படுகிறது? இந்த நாவல் இதைத் தொடத் தயங்குகிறது. அல்லது ஆசிரியர் தயங்குகிறார்.


4. சிங்கப்பூர் நவீனத் தமிழ் சமூக வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், நடவடிக்கைகள் இந்த நாவலில் சிறப்பாக வெளியாகி இருக்கின்றன. சிங்கைத் தமிழ் சமூகம், மரபுக்கும் அதிநவீனத்துக்கு இடையில் நின்றுகொண்டிருக்கிறது. இரண்டின் அம்சங்களும் அதற்குள் கலந்திருக்கிறது. தன்னை முற்றாக நவீனத்துக்குள் திணித்துக்கொள்ளவும் இல்லை, மரபை கைவிடவும் இல்லை. டிரான்சிஷன் மனநிலை, நாவலெங்கும் நன்றாக வந்திருக்கிறது.


5. கடைசியில் இருவரும் சேர்ந்துவாழாமல் போவதும், பிரிவதற்கான காரணமும் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம்.


6. ஜெயந்தி வளர்த்துக்கொள்ள வேண்டிய அம்சங்களில் ஒன்று, தனித்துவமான மொழி. இந்த நாவலில் பல இடங்கள், ரொம்பவும் வறண்டு இருக்கின்றன.


வித்தியாசமான கரு, சிங்கை நவீனத் தமிழ் மனநிலை - இரண்டையும் ஜெயந்தி சிறப்பாக இந்த நாலில் கொண்டு வந்திருக்கிறார். அதற்காகவே ஜெயந்தியின் மனப்பிரிகை கவனம் பெறும் நாவலாக இருக்கிறது.


நாவல்

ஜெயந்தி சங்கர்

சந்தியா பதிப்பகம்
Address: New No 77,
53rd Street 9th Ave,
Ashok Nagar,
Chennai – 600 083
Tel/Fax: 91-44-24896979
Email: sandhyapublications@gmail.com

மாறி வரும் சமூகத்தைப் பற்றிய நாவல் - நூல் அறிமுகம்





- நிர்மலா

புத்தகத்தை கையில் எடுத்து தலைப்பை வாசிக்கும் எவருக்கும் கதைக்களம் என்ன என்று யூகிப்பது சுலபமல்ல. எளிய வார்த்தையில் இதை ஒரு சமூக நாவல் என்று சொன்னாலும், இது சமூகத்தில் புதிதாக தோன்றி பரவிக் கொண்டிருக்கும் ஒரு கனமான விஷயத்தை லேசாகச் சொல்லிப் போகும் ஒரு நாவல். இதுவரை பேசப்படாத திருமணத்திற்கு முன் 'சேர்ந்து வாழ்தல்' என்ற சர்ச்சைக்குள்ளாகும் விஷயத்தை நாசுக்காக சொல்ல வந்ததற்காக ஆசிரியரை பாராட்டலாம். கதைக்களனை சிங்கப்பூராகக் கொண்டதில் அவருடைய புத்திசாலித்தனம் தெரிகிறது. தமிழ் நாட்டில் வாழும் தமிழ் சமூகம் இது இங்கே நடப்பதில்லை என்று சமாதானம் செய்து கொள்ளலாம், சுலபமாக.


யதார்த்தமான கதாபாத்திரங்கள், அவற்றின் பேச்சு மொழி வாசகரை உள்ளே இழுத்து அந்த கதையமைப்பில் ஒருவராக, ஒரு அமைதியான பார்வையாளராக்குவதில் வெற்றி பெறுகிறது. சேர்ந்து வாழும் கட்டத்திற்கு வாசகரை கொண்டு செல்ல எடுத்துக் கொள்ளும் நீளத்தில் அந்த விஷயம் முகத்தில் அறையாமல் ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ள வைக்கிறது. எல்லா கதாப்பாத்திரங்களும் 'சேர்ந்து வாழ்தலின்' சாதக பாதகங்களை அலசுகின்றன. இளைய தலைமிறையின் கருத்துகளும், பெரியவர்களின் கலாச்சார கவலைகளையும் சார்பில்லாமல் முன் வைக்கப்பட்டிருக்கிறது. எதிர்ப்புகளும் அதை எதிர்கொள்தலும் கூட.


குடும்பங்கள் என்று சொல்லும் போது சிங்கப்பூர் வாழ் கோபியோ, சந்தியாவோ நாம் அன்றாடம் காணும் இளம் வயதினரில் பெரிய மாற்றமில்லாதவர்கள். இரண்டு குடும்பத்திலும் திருமணம் தொடர்பான அனுபவங்கள், கசப்புகள், கனவுகள் எல்லாமாக அவர்களை இப்படி ஒரு ஏற்பாட்டிற்கு வருவதாக கொண்டு செல்வது நேர்த்தி. அவர்கள் மூலமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் சிங்கப்பூர் வாழ்க்கை, அவர்கள் பண்டிகைகள், பழக்கங்கள், உணவுமுறைகள், சீனர்களோடு கலந்து வாழும் இந்திய மக்கள்... இவற்றால் கதையோடு ஒன்றச் செய்ய ஆசிரியர் முனைந்தாலும் சற்றே உணரும் அந்நியமும் தவிர்க்க இயலாதது.


'பின்னால் வரக் கூடிய சின்னச் சின்ன சவால்களை முன்கூட்டியே அறிய அவனுக்குள் எழுந்த அடங்காத ஆர்வம் அவனுக்கே மிகவும் சுவாரஸியமாக இருந்தது. நிறையப் பேசிட ஆர்வம் கொண்டான். நம்பிக்கை வளர அந்த உரையாடல்களும், உரத்த சிந்தனைகளும் உதவுமென்று நம்பினான். எதிர்மறை அனுபவங்களென யார் வாயிலிருந்து வந்தாலும் உள்வாங்க அவனில் இருந்த கவனமும் ஆர்வமும் விடவில்லை. அவற்றைத் தனக்குள் பதிந்து கொள்வது உதவும் என்றே அவன் யோசிக்கவில்லை.'


இவ்வாறாக தொடங்கும் அவர்களின் சேர்ந்து வாழ்தல் எதிர்கொள்ளும் சவால்களும் அது அவர்களை எடுக்கச் செய்யும் முடிவுமாக.


அப்பாவின் சாவை அமைதியாக எதிர்கொள்ளும் சந்தியாவின் அம்மா கதாபாத்திரம் நிறைய உறுதியும் ஆழமுமானது. அவருக்கும் ராதா அத்தைக்கும் உள்ள நெருக்கம் அலாதியானது. அந்தக் கதாபாத்திரம் தன்னை இன்னும் கொஞ்சம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கலாம்.


சிங்கப்பூரின் வாழ்க்கை முறை, திருமணத்திற்கு முன்னும் பின்னும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், இடங்களின் பெயர்கள், சீன கதாப்பாத்திரங்கள் தமிழ் வாசகரை கொஞ்சம் தள்ளியே வைக்கிறது. எல்லா கதாப்பாத்திரங்களும் பெரும்பாலும் நல்லவர்களாயும், அல்லாதவைகளும் நியாயப்படுத்தக் கூடிய அளவில் இருப்பது இயல்பில்லாதது. ஒரு சமூக நிகழ்வை பதிவு செய்யும் ஒரு நாவலின் எல்லா கதாப்பாத்திரங்களும் வெள்ளை, வெளிர் சாம்பல் நிறங்களிலுமாய், கறுப்பென்னும் நிறமே இல்லாதது... கதாசிரியர் சிருஷ்டித்த கனவு சமூகமாக இருப்பது ஒரு குறை. நிரடும் அச்சுப்பிழைகளை கவனித்திருக்கலாம்.


குழப்பத்தில் ஆழும் கதாபாத்திரங்களின் கனவுகளாய் இடையிடையே விரியும் விசித்திர பக்கங்கள் சுவாரசியம். கடைசி பக்கங்களில் கடிதங்களில் தன்னை முடித்துக் கொள்ளும் நாவல்... மொத்தக் கதாப்பாத்திரங்களையும் மறுபடியும் நினைவுக்கு கொண்டு வந்து அலையலையாக மனதில் தங்கிவிடுகின்றது, புத்தகம் சமர்ப்பிக்கப்பட்ட அழகான உறவுகளோடு சேர்த்து.



நாவல்

ஜெயந்தி சங்கர்

சந்தியா பதிப்பகம்
Address: New No 77,
53rd Street 9th Ave,
Ashok Nagar,
Chennai – 600 083
Tel/Fax: 91-44-24896979
Email: sandhyapublications@gmail.com